உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது
x
தினத்தந்தி 15 Aug 2018 12:15 AM GMT (Updated: 14 Aug 2018 8:23 PM GMT)

3 மாத குழந்தை உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றேன் என்று அந்த குழந்தையின் தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சரவணம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (22). இவர்களுக்கு சசிபிரியா (2) மற்றும் 3 மாதமான கவிஸ்ரீ என்ற 2 குழந்தைகள்.

கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்த வனிதா, வீட்டிற்குள் தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறி அழுதார்.

இந்த செய்தி அந்தப்பகுதியில் பரவியது. இந்த தகவல் அறிந்த கார்த்திக்கும் தொழிற்சாலையில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அத்துடன் போலீசார் வனிதாவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில், தனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் சீனிவாசன் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாகவும், கள்ளக்காதலுக்கு 3 மாத குழந்தை இடையூறாக இருந்ததால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டும் குப்பைமேடு என்ற பகுதியில் பிளாஸ்டிக் பைக்குள் வைத்து வீசப்பட்ட குழந்தை கவிஸ்ரீ உடலை போலீசார் மீட்டனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து வனிதாவை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு கள்ளக்காதலன் சீனிவாசன் உடந்தையாக இருந்ததால் நேற்று காலையில் போலீசார் சீனிவாசனையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 மாத குழந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து வனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–

வனிதாவுக்கும், பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த திருமணம் ஆகாத சீனிவாசனுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீனிவாசனின் பேச்சு வனிதாவை கவர்ந்தது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. கார்த்திக் வேலைக்கு சென்ற பின்னர் வனிதா, சீனிவாசனை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

அவர்கள் உல்லாசமாக இருக்கும்போது 3 குழந்தைகளும் அடிக்கடி அழுதன. இதனால் மூத்த குழந்தையை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது தாயின் வீட்டில் கொண்டு விட்டார். 3 மாத குழந்தையை மட்டும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வனிதா, சீனிவாசனை தனது வீட்டிற்கு அழைத்தார். அவர் அங்கு வந்தபோது 3 மாத குழந்தை அழுதது. இது அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்தது.இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர்.காமம் கண்ணை மறைத்தது.பெற்ற குழந்தை என்றும் பாராமல் கள்ள காதலனுடன் சேர்ந்து அதை கொல்ல வனிதா முடிவு செய்தார்.

அதன்படி அவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு குப்பைமேட்டில் போட்டு விட்டனர். ஆனால் விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் அவர் போலீசில் சிக்கிக்கொண்டார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Next Story