சமூக வலைதளத்தில் சகோதரிக்கு அவதூறு: தட்டிக்கேட்ட கல்லூரி மாணவருக்கு கத்தி வெட்டு - வாலிபர் கைது


சமூக வலைதளத்தில் சகோதரிக்கு அவதூறு: தட்டிக்கேட்ட கல்லூரி மாணவருக்கு கத்தி வெட்டு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2018 11:01 PM GMT (Updated: 15 Aug 2018 11:01 PM GMT)

சமூக வலைதளத்தில் சகோதரியை அவதூறாக விமர்சித்ததை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை ஒர்லி பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான்(வயது18). கல்லூரி மாணவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரியுடன் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த படத்தை பார்த்த மொய்தீன் சேக் (21) என்பவர், அந்த பெண் குறித்து அவதூறாக விமர்சித்து அதில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் இம்ரான் கான் அவரை கண்டித்து உள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மொய்தீன் சேக்கை பைகுல்லா பகுதியில் சந்தித்த இம்ரான் கான் தனது சகோதரி குறித்து அவதூறாக விமர்சித்தது தொடர்பாக அவரை தட்டிக்கேட்டார்.

இதில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் கோபம் அடைந்த மொய்தீன் சேக் அருகே உள்ள வடபாவ் கடையில் இருந்த கத்தியை எடுத்துவந்து இம்ரான் கானை சரமாரியாக வெட்டினார். இதில், அவருக்கு முகம், தோள்பட்டையில் பலத்த வெட்டு விழுந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மொய்தீன் சேக்கை மடக்கி பிடித்தனர். மேலும் காயமடைந்த இம்ரான் கானை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 8 தையல்கள் போடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அக்ரிபாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து மொய்தீன் சேக்கை கைது செய்தனர்.

Next Story