காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த பெண்; வாலிபர் கைது


காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த பெண்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Sep 2018 10:15 PM GMT (Updated: 1 Sep 2018 8:13 PM GMT)

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் விஷம் குடித்தார். வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு பகுதியை சேர்ந்தவர்பழனி. இவருடைய மகள் சரஸ்வதி (வயது 21). இவருக்கும், கத்தரிப்புலம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சரஸ்வதி கணவரிடம் இருந்து பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அப்போது செம்போடை வடக்கு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வக்குமார் (28) என்பவருக்கும் சரஸ்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் காதலித்து வந்தனர்.

இதனால் செல்வக்குமார் திருமணம் செய்து கொள்வதாக சரஸ்வதியிடம் உறுதி அளித்துள்ளார். இந்தநிலையில் செல்வக்குமாருக்கும் அவருடைய உறவுக்கார பெண்ணுக்கும் வருகிற 5-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணமா? என்பது குறித்து செல்வக்குமாரை சந்தித்து கேட்டுள்ளார். அதற்கு செல்வக்குமார் சரஸ்வதியை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரஸ்வதி, வேதாரண்யம் மகளிர் போலீசில் தன்னை திருமணம் செய்வதாக காதலித்துவிட்டு செல்வக்குமார் ஏமாற்றி விட்டார் என புகார் அளித்துவிட்டு பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரஸ்வதியை சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வர்ஜினியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வக்குமாரை கைது செய்தனர்.

Next Story