தர்மபுரியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை


தர்மபுரியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 2 Sep 2018 11:00 PM GMT (Updated: 2 Sep 2018 9:14 PM GMT)

தர்மபுரியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி பாரதிபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர் தர்மபுரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதே பகுதியில் வசிப்பவர் அசோகன் (40). இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். பின்னர் அவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் அசோகன் புகார் அளித்தார்.

இதே போல் அதே தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (50). இவர் தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகையும், ரூ.10 ஆயிரமும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரம் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த 3 சம்பவங்கள் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 3 வீடுகளில் 40 பவுன் நகையும், ரூ.30 ஆயிரமும் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story