மீன் வியாபாரி கொலை வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் வாலிபர் சரண்


மீன் வியாபாரி கொலை வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:15 PM GMT (Updated: 5 Sep 2018 10:05 PM GMT)

சேலம் மீன் வியாபாரி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

நாமக்கல்,

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). இவர் சாரதா கல்லூரி சாலையில் மீன்கடை நடத்தி வந்தார். கடந்த 22-ந் தேதி மீன்களை வறுத்து விற்பனை செய்து கொண்டு இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் வெங்கடேசனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்த பெரியபுதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார் (25), ஓடைக்கரை ராமு (34) ஆகியோர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் போலீசார் ஓமலூரை சேர்ந்த சசிக்குமார் (26) என்பவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சசிக்குமார் நேற்று நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

மாஜிஸ்திரேட்டு தனபால் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story