வேலூர்: துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை - ரூ.3¼ லட்சம், ஆவணங்கள் பறிமுதல்


வேலூர்: துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை - ரூ.3¼ லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:30 PM GMT (Updated: 7 Sep 2018 10:22 PM GMT)

வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய முருகன் தியேட்டர் பகுதியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை இயக்குனராக சுப்பிரமணியன் கடந்த 1½ ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்திற்குள் இருந்து ஊழியர்கள் வெளியே யாரும் செல்லாத வகையிலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாத வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சோதனையில் சுப்பிரமணியன் உள்பட 11 அலுவலக ஊழியர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் அதுகுறித்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

போலீசாரின் விசாரணையில் சுப்பிரமணியன் வேலூர் வள்ளலார் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த வீட்டை சுப்பிரமணியன் தனி அலுவலகமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சுப்பிரமணியன் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில் ஒரு வீட்டை ரூ.8 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். இங்கு படித்த இளைஞர்கள் 37 பேரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார். மேலும் ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியையும் வேலைக்கு அமர்த்தி உள்ளார். அவருக்கு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.

சுப்பிரமணியன் அலுவலக பணிகளை இந்த வீட்டில் முறைகேடாக நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. துணை இயக்குனர் அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று ஒரு சோதனை நடத்தப்பட்டு அப்போது அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story