ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுவிக்கும் முடிவை தாமதப்படுத்தாமல் எடுக்க வேண்டும்


ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுவிக்கும் முடிவை தாமதப்படுத்தாமல் எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Sep 2018 11:00 PM GMT (Updated: 16 Sep 2018 8:21 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் முடிவை தாமதப்படுத்தாமல் எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

திருச்சி,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் தேவராசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். மாநில அவைத்தலைவர் சென்னியப்பன், மாநில பொருளாளர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சக்தி நடராஜன், தங்கவேல், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் பெய்த பலத்த மழையால் தமிழகத்தில் உள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் மாவட்டத்தின் உள்பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உபரிநீரை தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டார்கள். ஆனால் அதனை செயல்படுத்தாததால் இப்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது உபரிநீரை தேக்கி வைக்கும் வகையில் குளம், குட்டைகளை தூர்வார வலியுறுத்தி எங்கள் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் உலக கொங்கு தமிழர் மாநாடு மலேசியாவில் நடந்தது. அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி 3-ந் தேதி 2-வது உலக கொங்கு தமிழர் மாநாடு நாமக்கல் மாவட்டத்தில் நடக்கிறது.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் முடிவை சட்டத்துக்கு உட்பட்டு தாமதப்படுத்தாமல் எடுக்க வேண்டும். எச்.ராஜாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் கோபத்தில் பேசுவதும், பிறகு அதை நான் பேசவில்லை என்று கூறுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆகவே அரசியல் கட்சி தலைவர்கள் பேசும்போது யோசித்து பேச வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விடக்கூடாது.

ஊழலும், லஞ்சமும் கொலைக்குற்றத்தை விட மோசமானது. ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அமைச்சர்களாகவும், அரசு பதவிகளிலும் தொடர்கிறார்கள். அவ்வாறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு அந்த கட்சியில் பொறுப்பு வழங்கு கிறார்கள் என்றால் அது அவர்களுடைய உட்கட்சி பிரச்சினை. ஆனால் மக்கள் இதையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு உரிய தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story