வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளியின் உடல் மீட்பு


வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளியின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 16 Sep 2018 11:15 PM GMT (Updated: 16 Sep 2018 10:32 PM GMT)

வேலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய தொழிலாளியின் உடல் 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

வேலூர்,

ஆற்காடு அருகே உள்ள முப்பதுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 41), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் அரியூரை அடுத்துள்ள ஆவாரம்பாளையம் கல்குவாரி அருகே தங்கி, மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி மாலை குமார் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். அனைவரும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குமார் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த சகதொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் மற்றும் வேலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குட்டையில் இறங்கி குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரை அவர் உடலை மீட்கவில்லை.

இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை குட்டையில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் உடலை மீட்கவில்லை. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று காலை 6 மணியளவில் தேடும் பணி தொடர்ந்து. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 7.30 மணி அளவில் உடலை மீட்டனர்.

பின்னர் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story