இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - சொத்தவிளை கடலில் கரைப்பு


இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - சொத்தவிளை கடலில் கரைப்பு
x
தினத்தந்தி 18 Sep 2018 11:09 PM GMT (Updated: 18 Sep 2018 11:09 PM GMT)

நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டன.

நாகர்கோவில்,

விநாயகர் சதுர்த்தியையொட்டி அகில பாரத இந்து மகா சபா சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

குமரி மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து, நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சொத்தவிளை கடலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நாகராஜா கோவில் திடலுக்கு இந்து மகா சபாவை சேர்ந்தவர்கள் எடுத்து வந்தனர். பின்னர் நாகராஜா கோவில் முன் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தை மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நாகராஜா கோவில் முன்பிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரில் பல்வேறு சாலைகளில் வலம் வந்தது. பின்னர் ஊர்வலம் என்.ஜி.ஓ. காலனி வழியாக சொத்தவிளை கடற்கரையை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் விநாயகர் சிலைகளை எடுத்து வந்த அனைத்து வாகனங்களும் பூக்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடிக்கொண்டு ஊர்வலத்தின் முன் பக்தர்கள் சென்றனர். ஊர்வலத்தை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் பார்த்து பக்தியோடு விநாயகரை வழிபட்டனர்.

அதைத் தொடர்ந்து சொத்தவிளை கடற்கரையில் விநாயகர் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பிறகு சிலைகளை கடலில் கரைத்தனர். அந்த வகையில் மொத்தம் 249 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் வீடுகளில் வைத்து பூஜை செய்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சியை வக்கீல் கிரினிவாசபிரசாத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக பொதுக்கூட்டம் நடந்தது. ஊர்வலத்தில் விநாயகர் சிலைகளை சிறப்பாக அலங்கரித்து கொண்டு வந்தவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் பரிசுகளை வழங்கினார். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஞானவித்யா மந்திர் பள்ளியின் துணை தாளாளர் மணிகண்டன் வழங்கினார்.

Next Story