விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை–பணம் கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை–பணம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Sep 2018 9:30 PM GMT (Updated: 19 Sep 2018 4:56 PM GMT)

வேப்பூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள பா.கொத்தனூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (வயது 40), விவசாயி. இவரது வீட்டில் தாய் கொளஞ்சியம்மாள்(60) மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கொளஞ்சியம்மாள் வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் மறுநாள் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கொளஞ்சியம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மற்றும் 7 பவுன் சங்கிலி, சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொளஞ்சியம்மாள் வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் பெட்டியில் இருந்த ரூ.2 லட்சம், 7 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில், நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story