நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது


நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 19 Sep 2018 10:44 PM GMT (Updated: 19 Sep 2018 10:44 PM GMT)

நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது.

மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்து அடைகிறது. அங்கிருந்து தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இருப்பினும் நீர்வரத்தை விட பாசனத்துக்கு கூடுதலாக கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரத்து 483 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9 ஆயிரத்து 119 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 111.42 அடியாக இருந்தது.

அணையில் இருந்து பாசனத்துக்காக 22 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்து 110.58 அடியாக இருந்தது.


Next Story