புதுச்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


புதுச்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 21 Sep 2018 12:11 AM GMT (Updated: 21 Sep 2018 12:11 AM GMT)

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1½ கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, களங்காணி, காரைக்குறிச்சி, திருமலைப்பட்டி, கதிராநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்தார்.

செல்லப்பம்பட்டியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.14.48 லட்சம் மதிப்பில் வண்ணான்குட்டை குளத்தின் கரை வலுப்படுத்தப்பட்டு வரும் பணியையும், மின்னாம்பள்ளி இந்திராநகரில் ரூ.1.92 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியையும், சந்தைபேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

அதேபோல் களங்காணியில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டையும், காரைக் குறிச்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் திருமலைப்பட்டி ஊராட்சி, எடையாப்பட்டி ஓடையில் ரூ.4.55 லட்சம் மதிப்பில் நடந்து வரும் வாய்க்கால் தூர்வாரும் பணியையும், ரூ.8 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணியையும், ரூ.9ஆயிரம் மதிப்பில் நீர் உறிஞ்சும் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.

மேலும் கதிராநல்லூர் ஊராட்சி, நத்தமேட்டில் வாதனமரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணி, மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு வரும் பணி மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு வரும் பணி என மொத்தம் ரூ.1½ கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், சரவணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story