மல்லிப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுமான பணிக்காக மூடப்பட்ட வடிகால்கள்: கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம்


மல்லிப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுமான பணிக்காக மூடப்பட்ட வடிகால்கள்: கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 22 Sep 2018 7:22 PM GMT)

மல்லிப்பட்டினத்தில் துறைமுகம் கட்டுமான பணிக்காக வடிகால்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதை அகற்றிவிட்டு ரூ.66 கோடி மதிப்பீட்டில் புதிதாக துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கடந்த ஆண்டு (2017) தொடங்கியது. தற்போது துறைமுகம் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த துறைமுகத்தை சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிகால்கள் மூடப்பட்டு விட்டதால், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ராமர்கோவில் தெரு உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்குள் மழை காலத்தில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த கிராமங்களில் 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மீன்பிடி தொழில் மட்டுமே இவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இந்த நிலையில் துறைமுகம் கட்டுமான பணிகளுக்காக மழைநீர் வடிகால்கள் மூடப்பட்டு இருப்பது கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது::-

மல்லிப்பட்டினம், கள்ளியவயல்தோட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மழை பெய்யும்போது வெள்ளம் வடிகால்கள் வழியாக சென்று கடலில் கலந்து விடும். தற்போது துறைமுகம் பெரிய அளவில் கட்டப்பட்டு வருவதால் துறைமுகத்தை சுற்றிலும் சுவர் எழுப்பி உள்ளனர். இதனால் வடிகால்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

இதன் காரணமாக மழை காலங்களில் வெள்ளம் வடிவதற்கு வழியின்றி கிராமங் களுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழை காலம் தொடங்கும் முன்பாக மூடப்பட்ட வடிகால்களை சீரமைத்து மழை வெள்ளம் வழக்கம்போல் கடலில் கலக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Next Story