அ.தி.மு.க. நிர்வாகி கொலை: 4 பேரிடம் விடிய, விடிய விசாரணை


அ.தி.மு.க. நிர்வாகி கொலை: 4 பேரிடம் விடிய, விடிய விசாரணை
x
தினத்தந்தி 22 Sep 2018 10:15 PM GMT (Updated: 22 Sep 2018 9:44 PM GMT)

ஓசூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் பிடிபட்ட 4 பேரிடமும் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஓசூர்,

ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 33). அ.தி.மு.க. பிரமுகர். கடந்த 15-ந் தேதி ஓசூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்த அவர் கடத்தப்பட்டார். அவரை கடத்திய கும்பல் கொலை செய்து அவரது தலையை துண்டித்து உடலை கர்நாடக மாநிலம் ஆனேக்கல் - அத்திப்பள்ளி இடையே பிருந்தாவன் லேஅவுட் என்ற இடத்தில் வீசி சென்றது.

இக்கொலை தொடர்பாக ஆனேக்கல் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த கொலையில் ஓசூர் அருகே உள்ள ஈச்சங்கூரை சேர்ந்த ஹரீஷ், யஷ்வந்த், கோபசந்திரம் சந்தோஷ், ஓசூர் கேசவன் ஆகிய 4 பேரை போலீசார் பிடித்தனர். இவர்களுக்கு அந்த கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து நேற்று காலை அவர்களை கொலை நடந்த இடத்திற்கு அழைத்து சென்று எங்கு கொலை செய்தனர். எந்த இடத்தில் உடலை வீசினார்கள் என்ற விவரங்களை போலீசார் கேட்டனர். தற்போது பிடிபட்ட 4 பேரிடமும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். முனிராஜ் கடத்தப்பட்ட இடம் ஓசூர் அட்கோ போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதாலும், குற்றவாளிகள் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஓசூர் போலீசாரின் உதவியை ஆனேக்கல் போலீசார் நாடி உள்ளனர்.

இது குறித்து ஆனேக்கல் போலீசார் கூறுகையில், “இன்னும் ஓரிரு நாட்களில் இக்கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் பிடிபடுவார்கள். 6 முதல் 8 பேருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். 

Next Story