மந்திரவாதிகளை வைத்து மணல்குவாரியில் சிறப்பு பூஜை - முத்துப்பேட்டை அருகே பரபரப்பு


மந்திரவாதிகளை வைத்து மணல்குவாரியில் சிறப்பு பூஜை - முத்துப்பேட்டை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 29 Sep 2018 11:30 PM GMT (Updated: 29 Sep 2018 11:07 PM GMT)

மணல் எடுப்பதற்கு பொதுமக்களின் எதிர்ப்பை அடக்க, மந்திரவாதிகளை வைத்து மணல்குவாரியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே மணல் எடுப்பதற்கு பொதுமக்களின் எதிப்பை அடக்குவதற்காக மந்திரவாதிகளை வைத்து மணல் குவாரியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்றதும் அங்கிருந்து மந்திர வாதிகள் தப்பியோடி விட்டனர். அவர்களுடன் வந்த 5 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் துரைதோப்பு கிராமத்தில் மணல் குவாரி அமைப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்த ஒரு தென்னந்தோப்பை திருவாரூரை சேர்ந்த தனியார் சிலர் வாங்கி மணல் குவாரி அமைக்க அரசு சார்பில் அனுமதி கோரினர். இதனையடுத்து அரசு சார்பில் அந்த மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு மணல் எடுப்பதற்காக பூஜை போட்டு பணிகள் தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து அங்கு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். இதனைதொடர்ந்து மணல் குவாரிக்கு அனுமதி பெற்றவர்கள் மணல் எடுக்க முயற்சிப்பதும் அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்துவதும் வாடிக்கையாக நடந்து வந்தது.

இது தொடர்பாக இந்த கிராமத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து சமீபத்தில் கிராம மக்கள் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அந்த இடத்தில் மணல் எடுக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அங்கு பொக்லின் எந்திரம் மற்றும் லாரியுடன் வந்த சிலர், தென்னந்தோப்பு வேலியை பிரித்து உள்ளே மணல் எடுத்து செல்வதற்காக நுழைந்தனர். இதனையறிந்த அந்த பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டு மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அந்த பொக்லின் எந்திரம் மற்றும் லாரியை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்து செல்லவில்லை. அவை அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மணல் எடுக்கும் பகுதிக்கு 2 மந்திரவாதிகளும் அவர்களுடன் மேலும் 5 பேரும் வந்தனர். அங்கு வந்த மந்திரவாதிகள் சிறப்பு பூஜை செய்தனர். ஒருபுறம் பூஜை நடந்து கொண்டு இருக்க மறு புறம் அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரிகளில் பொக்லின் எந்திரம் மூலம் மணல் எடுத்துக்கொண்டு இருந்தனர். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் மந்திரவாதிகள் இருவரும் சாமார்த்தியமாக அங்கிருந்து நைசாக தப்பியோடி விட்டனர். அங்கு வந்த கிராம மக்கள், மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தியதுடன் அங்கு இருந்த 5 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரச்சினைக்குரிய இடத்தில் மீண்டும் முறைகேடாக மணல் எடுத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார், பொக்லின் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் கிராம மக்கள் சிறை பிடித்து வைத்து இருந்த 5 பேரையும் மீட்டு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் இந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த அங்கரசன் என்பவர் கூறியதாவது:-

இந்த பகுதியில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு போய் விடும். இப்பகுதியை சுற்றி அமைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். அதனால் இங்கு மணல் குவாரிக்கு அனுமதிக்ககூடாது என இந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக முதல்-அமைச்சர் வரையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மணல் எடுக்க தடை விதித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் மணல் எடுத்து செல்ல வந்த வாகனங்களை இந்த பகுதியினர் சிறைபிடித்தனர். போலீசார் தலையிட்டு மணல் எடுப்பதை தடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மந்திரவாதிகளுடன் வந்து பூஜை செய்து மணல் எடுக்க முயற்சித்தனர். அப்போது பொதுமக்கள் ஒன்று திரண்டு தடுத்து மணல் எடுக்க வந்தவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம் இதில் இரண்டு மந்திரவாதிகள் தப்பியோடி விட்டனர். இனியும் இந்த செயல் தொடர்ந்தால் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்கவும் கிராம கமிட்டி சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.



Next Story