திருமுல்லைவாயலில் திருமணமான 19 நாளில் நர்சிங் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்; ஆர்.டி.ஓ. விசாரணை

திருமுல்லைவாயலில், திருமணமான 19 நாளில் நர்சிங் மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஆவடி,
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை(வயது 39). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் பென்னாத்தூர் ஆகும். கணவரை இழந்த இவருடைய மகள் துர்கா(19). இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
அஞ்சலையின் அண்ணன் மகன் ராசுகுட்டி(24). கட்டிட தொழிலாளி. தாய்–தந்தையை இழந்து தனியாக வாழ்ந்து வரும் இவருக்கு, அஞ்சலை தனது மகள் துர்காவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்.
ஆனால் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த துர்கா, தான் படிக்க ஆசைப்படுவதாக கூறினார். அதற்கு அவரது உறவினர்கள், திருமணத்துக்கு பிறகு உன்னை தொடர்ந்து படிக்க வைக்கிறோம் என்று கூறி அவரை சமாதானம் செய்தனர். இதனால் அவர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த மாதம் 12–ந் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் ராசுகுட்டி–துர்கா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு இருவரும் திருமுல்லைவாயல், தென்றல் நகரில் கடந்த 19 நாட்களாக தனிக்குடித்தனமாக வாழ்ந்து வந்தனர்.
திருமணத்துக்காக விடுப்பில் இருந்த துர்கா, இன்று(திங்கட்கிழமை)முதல் கல்லூரிக்கு செல்ல இருந்தார். நேற்று காலை கடைக்கு செல்வதாக ராசுகுட்டி வெளியே சென்றுவிட்டார். துர்கா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்த ராசுகுட்டி, கதவு உள்புறமாக பூட்டி இருப்பதை கண்டு கதவை தட்டினார். நீண்டநேரம் தட்டியும் துர்கா கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டின் சிமெண்டு ஓட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு துர்கா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், துர்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
துர்காவுக்கு திருமணமாகி 19 நாட்களே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.






