கொள்ளிடம் கடைமடைபகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


கொள்ளிடம் கடைமடைபகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2018 11:15 PM GMT (Updated: 30 Sep 2018 10:29 PM GMT)

கொள்ளிடம் கடைமடை பகுதி பாசனத்துக்கு புதுமண்ணியாறு, பொறைவாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் கடைமடைப்பகுதியில் முக்கிய பாசனவாய்க்காலாக புதுமண்ணியாறு, பொறைவாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை நம்பி சுமார் 12 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடைமடைப்பகுதிக்கு இதுவரை மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், பாசன வாய்க்கால் மற்றும் விவசாய நிலங்களுக்கு வந்து சேரவில்லை. தற்போது விவசாயிகள் சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தற்போது கடைமடைப்பகுதிக்கு இந்த ஆண்டு அதிகளவில் தண்ணீர் வரும் என்று விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். ஆனால் தண்ணீர் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவபிரகாசம் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியத்தில் பொறைவாய்க்கால், புதுமண்ணியாறு, தெற்குராஜ வாய்க்கால் முக்கிய பாசன வாய்க்காலாக திகழ்ந்து வருகிறது. எனவே இந்தபகுதி விவசாயிகள் மழை மற்றும் காவிரி பாசனத்தை நம்பி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளிடம் விவசாயிகள் ஆயில் என்ஜின் மற்றும் மின்மோட்டார்கள் மூலம் சம்பா நாற்றாங்கால் அமைத்து, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொறைவாய்க்கால், புதுமண்ணியாறு பாசன வாய்க்கால் பகுதிகளான உமையாள்பதி, மாதானம், பழையபாளையம், ஆச்சாள்புரம், ஆலங்காடு, எடமணல், வடகால், கடவாசல், ஓலையாம்புத்தூர், கீழமாத்தூர், அரசூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் விளைநிலங்களுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் நேரடி நெல் விதை மூலம் செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் நலனை பாதுகாக்க தமிழக அரசு கொள்ளிடம் கடைமடைப்பகுதிக்கு புதுமண்ணியாறு, பொறைவாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story