ராணிப்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக்கொலை


ராணிப்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2018 10:15 PM GMT (Updated: 3 Oct 2018 9:24 PM GMT)

ராணிப்பேட்டை அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்து, அவரது உடலை கிணற்றில் வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த பெல் எதிரில் உள்ள நரசிங்கபுரம் சர்ச்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற வில்சன் (வயது 28). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் தமிழ்ச்செல்வி (2) என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. இதனால் ரம்யா நேற்று காலை கணவர் அருண்குமாரை தேடினார். அப்போது மணியம்பட்டு ஏ.எஸ்.ஏ. நகர் அருகே உள்ள தனியார் கிணற்றின் உள்ளே புதர் பகுதியில் அருண்குமார் பிணமாக கிடப்பதும், அவரது மோட்டார் சைக்கிள் அந்த கிணற்றின் மேட்டு பகுதியில் மரத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிப்காட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து போலீசார் கிணற்றின் உள்ளே புதர் பகுதியில் இருந்து அருண்குமாரின் உடலை மீட்டனர். அப்போது அருண்குமாரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இதனால் அருண்குமாரை யாரோ அடித்துக்கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் என்பது தெரியவந்தது.

வேலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘சன்னி’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் போலீசார், அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story