கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 7:51 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழி யர்கள் - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதை உடனே வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதிய முரண்பாடு களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் 27-ந்தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் (தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

மேலும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை 11 மணியளவில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தயாளன், ராமர், அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. மழையை பொருட்படுத்தாமல் கையில் குடை பிடித்தவாறு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், கூட்டுறவு அலுவலர்கள் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர்கள் சங்கம், கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் சங்கம், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் உள்பட 18 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டதால் கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story