திருப்பூர் அருகே பரபரப்பு சம்பவம்: தொழில் அதிபரின் மகன் கடத்தி கொலை


திருப்பூர் அருகே பரபரப்பு சம்பவம்: தொழில் அதிபரின் மகன் கடத்தி கொலை
x
தினத்தந்தி 5 Oct 2018 11:30 PM GMT (Updated: 5 Oct 2018 9:49 PM GMT)

திருப்பூர் அருகே தொழில் அதிபரின் மகனை அவருடைய நண்பர்கள் பணத்துக்காக கடத்தி கொடூரமாக கொலை செய்தனர்.

ஊத்துக்குளி,

தொழில் அதிபரின் மகனை அவருடைய நண்பர்கள் பணத்துக்காக கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் மானூர் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி(வயது 50). இவருடைய மனைவி செல்வி(45). இவர்களுடைய மகன் ஆனந்த்(25). பட்டதாரி. திருமலைசாமி படியூர் அருகே மாரநாயக்கனூர் குன்னம்பாளையத்தில் எண்ணெய் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையை தந்தையுடன் சேர்ந்து ஆனந்த் கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஆனந்த் எண்ணெய் ஆலைக்கு சென்றார். ஆனால் இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போன் எண்ணை திருமலைசாமி தொடர்பு கொண்டார். அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எண்ணெய் ஆலைக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். மேலும் ஆலையில் பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் பார்வையிட்டார்.

அப்போது ஆனந்த்தை 3 பேர் சேர்ந்து தாக்கி ஒரு காரில் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருமலைசாமி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், மானூர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள பாலகுரு(36) என்பவர் 2 பேருடன் சேர்ந்து ஆனந்த்தை தாக்கி கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை போலீசார் பாலகுருவை தேடி அவர் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. பின்னர் வீட்டுக்குள் சோதனை நடத்தினார்கள். மேலும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமியும் வந்து விசாரணை நடத்தினார். பாலகுருவின் வீட்டுக்குள் ஒரு அறையில் ரத்தக்கறை படிந்த சாக்கு மூடை இருந்தது. அதை போலீசார் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

சாக்கு மூடைக்குள் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆனந்த் பிணமாக கிடந்தார். மேலும் அவருடைய முகத்தில் பாலித்தீன் பை வைத்து சுற்றி கட்டப்பட்டு இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பாலகுருவும், ஆனந்த்தும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் வெளியூர் சென்று வருவது வழக்கம். அப்போது ஆனந்த்திடம் அதிகமாக பணம் இருப்பதை பாலகுரு அறிந்துள்ளார். அவரிடம் இருந்து பணம் பறிக்க பாலகுரு திட்டமிட்டுள் ளார். அதன்படி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து எண்ணெய் ஆலைக்கு சென்று ஆனந்த்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததும் அவரை கட்டையால் தாக்கி கை, கால்களை கட்டி காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

ஆனந்த்தின் தந்தையிடம் மிகப்பெரிய தொகையை மிரட்டி பெறலாம் என்று திட்டமிட்டே கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். பாலகுருவின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டதால் வீட்டில் பாலகுரு மட்டும் இருந்துள்ளார். அதனால் ஆனந்த்தை தனது வீட்டுக்கு கடத்தி வந்து மிரட்டும்போது கழுத்தை நெரித்து, கட்டையால் தாக்கியதில் ஆனந்த் இறந்துள்ளார். பிணத்தை அப்புறப்படுத்த வழி தெரியாமல் சாக்குமூடையில் கட்டி வீட்டிலேயே வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுரு உள்ளிட்ட 3 பேரை தேடி வருகிறார்கள். பணம் கேட்டு எண்ணெய் ஆலை அதிபரின் மகனை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாக்கு மூடையில் பிணம் மீட்பு

ஆனந்த்தை கொலை செய்து உடலை சாக்கு மூடையில் கட்டி மளிகைக்கடைக்காரர் பாலகுருவின் வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்தனர். பிணம் வைக்கப்பட்ட அறைக்குள் எறும்பு வரும் என்பதால் அந்த அறை முழுவதும் மஞ்சள் பொடி தூவப்பட்டு இருந்தது. மேலும் மோப்பநாய் அடையாளம் காணாமல் இருக்கும் வகையில் வீட்டில் மிளகாய் பொடியையும் தூவி வைத்திருந்தனர். இந்த நிலையில்தான் சாக்குமூடையில் இருந்த ஆனந்த்தின் பிணம் மீட்கப்பட்டுள்ளது.


ஒரே மகனை இழந்த பெற்றோர்

திருமலைசாமியின் ஒரே மகன் ஆனந்த் ஆவார். பணத்துக்காக ஆனந்த்தை கொலை செய்து சாக்கு மூடையில் பிணத்தை வைத்திருந்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ஆனந்த்தின் உடலை பார்த்து பெற்றோர் கதறியழுதது பரிதாபமாக இருந்தது. தனது ஒரே மகனை இழந்து விட்டதால் மிகவும் துடித்தனர். அங்கிருந்த உறவினர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இருந்தாலும் அவர்கள் கதறி அழுதபடியே இருந்தனர்.






Next Story