ஓசூர் அந்திவாடியில் ரூ.3.69 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பணிகளை தொடங்கி வைத்தார்


ஓசூர் அந்திவாடியில் ரூ.3.69 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பணிகளை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:15 PM GMT (Updated: 8 Oct 2018 7:44 PM GMT)

ஓசூர் அந்திவாடியில் ரூ.3.69 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அந்திவாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் அமைக்க ரூ.3 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வாசுதேவன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:- அந்திவாடி விளையாட்டு அரங்கை தரம் உயர்த்தும் வகையில் ரூ.3 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இங்கு உடற்பயிற்சி கூடம், கூடை பந்து மைதானம் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அரங்கமாக இது திகழும். 3 மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், தாசில்தார் முத்துபாண்டி, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள் லோகநாதன், முத்துராஜ், சாக்கப்பா, அசோக்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story