கரூரில் தூங்கும் போது பரிதாபம்: ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி தாய்-மகள் சாவு


கரூரில் தூங்கும் போது பரிதாபம்: ஜெனரேட்டர் புகையால் மூச்சு திணறி தாய்-மகள் சாவு
x
தினத்தந்தி 8 Oct 2018 11:45 PM GMT (Updated: 8 Oct 2018 8:59 PM GMT)

கரூரில் தூங்கும் போது ஜெனரேட்டரில் இருந்து வந்த புகையால் மூச்சு திணறி தாய் - மகள் பரிதாபமாக இறந்தனர்.

கரூர்,

கரூர் ராமானுஜம் நகர் வாய்க்கால் மேடு பகுதியிலுள்ள ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 48). இவர் கரூர்- கோவை ரோட்டிலுள்ள மின்வாரிய அலுவலகம் அருகே தள்ளு வண்டியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரி(40). இவர்களுடை மகள் ராகவி(16), மகன்கள் ரஞ்சித்(14), ரகு(13). இதில் ராகவி சென்னையிலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்தார். வேட்டமங்கலம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ரஞ்சித் 9-ம் வகுப்பும், ரகு 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அக்டோபர் 7-ந் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் “ரெட் அலர்ட்“ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி சென்னையில் படித்து வந்த தனது மகள் ராகவியை, கரூரிலுள்ள வீட்டுக்கு ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் ஜே.ஜே.நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி கிளம்பியதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள பல்வேறு வீடுகளுக்கு மின்வினியோகம் தடைபட்டது. இது குறித்து அறிந்ததும் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அந்த மின்கம்பத்திலுள்ள வயர்களை சரி செய்து வீடுகளுக்கு மின்வினியோகம் செய்தனர்.

எனினும் ராஜா வீட்டின் மின் இணைப்பு பெட்டியில் கோளாறு இருந்ததன் காரணமாக அவரது வீட்டுக்கு மின்வினியோகம் கிடைக்கவில்லை. இதனால் சென்னையில் இருந்து வந்திருந்த ராகவி, இரவில் மின்விசிறி இயங்காததால் புழுக்கத்தில் தூங்க முடியாமல் அவதிபட்டார். இது குறித்து தனது தந்தையிடம் கூறி ராகவி வருத்தப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தனது பழக்கடையில் இருந்த ஜெனரேட்டரை ராஜா தனது வீட்டுக்கு எடுத்து வந்தார். பின்னர் அதிலுள்ள சுவிட்ச் பெட்டியிலிருந்து ஒரு டேபிள் பேனுக்கு மட்டும் இணைப்பு கொடுத்து விட்டு சொந்த வேலை காரணமாக அவர் வெளியே சென்று விட்டார். இதையடுத்து சுந்தரி, அவரது மகள் ராகவி ஆகியோர் கதவினை லேசாக மூடிவிட்டு தூங்கினர். மண்எண்ணெய் மூலம் ஜெனரேட்டர் இயங்கியது.

இந்த நிலையில் அந்த ஜெனரேட்டரில் இருந்து இரவு முழுவதும் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. அப்போது வீட்டின் வாசல் அருகே டேபிள் பேன் சுற்றிக் கொண்டிருந்ததால், ஜெனரேட்டர் புகையானது வீட்டினுள் பரவியது. அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் சுந்தரியும், ராகவியும் இதை உணரவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டினுள் முழுவதும் புகை மண்டியது. இதனால் சுவாசிக்க முடியாமல் தூங்கிய நிலையிலேயே சுந்தரி, ராகவி மூச்சுதிணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெளி வேலையை முடித்து விட்டு நேற்று காலை ராஜா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது, அவர் கண்ட காட்சி நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருந்தது. தனது மனைவி, மகள் பிணமாக கிடந்ததை பார்த்து விட்டு, ராஜா சத்தம்போட்டு கதறி துடித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெனரேட்டர் புகையினால் விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றி வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும், ராஜாவின் மகன்கள் ரஞ்சித், ரகு மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டு வந்து 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்யும் விதமாக இருந்தது.

Next Story