வைகோ கைதை கண்டித்து திருச்சி, மணப்பாறையில் ம.தி.மு.க.வினர் மறியல்


வைகோ கைதை கண்டித்து திருச்சி, மணப்பாறையில் ம.தி.மு.க.வினர் மறியல்
x
தினத்தந்தி 9 Oct 2018 11:00 PM GMT (Updated: 9 Oct 2018 9:03 PM GMT)

வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி, மணப்பாறையில் ம.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டை,

சென்னையில் நேற்று காலை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்ற போது போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் வைகோ தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். வைகோ கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட ம.தி.மு.க.வினர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிந்தாமணி அண்ணாசிலை அருகே கட்சி கொடியுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், காமராஜ் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மணப்பாறை பஸ் நிலையம் முன் ம.தி.மு.க. மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் ஒன்றியச் செயலாளர் துரைராஜ் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், வைகோ மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறி கண்டன கோஷங் களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story