அரசு பெண் ஊழியர் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்


அரசு பெண் ஊழியர் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:30 PM GMT (Updated: 10 Oct 2018 1:01 PM GMT)

அரசு பெண் ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு நொச்சிக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி (வயது 40). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சுலோச்சனா (36). இவர் கோவை வணிக வரித்துறை அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு வித்யா என்ற மகளும், ஜஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர்.

சுலோச்சனாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கர் சுலோச்சனாவிடம், பெருந்துறையில் உள்ள ஒரு வக்கீல் அலுவலகத்துக்கு வருமாறும், அங்கு வைத்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

இதனால் சுலோச்சனா பெருந்துறைக்கு சென்றுள்ளார். அங்கு சங்கர் பணம் தரமுடியாது என்று கூறியதாகவும், இதனால் மனம் உடைந்து சுலோச்சனா வி‌ஷம் குடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சுலோச்சனா சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுலோச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை சுலோச்சனாவின் உறவினர்கள் ஏராளமானோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் திடீரென சுலோச்சனாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், அமுதா ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும்போது, ‘சுலோச்சனாவின் சாவில் எங்களுக்கு மர்மம் உள்ளது. அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். அவரது உடலை எங்களுக்கு தெரியாமலேயே பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அவர் சாவுக்கு காரணமான சங்கர் மற்றும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உடலை வாங்க மாட்டோம்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘சுலோச்சனாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறுகிறீர்கள். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அவர் கொலை செய்யப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் சுலோச்சனாவின் உடலை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story