திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை


திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 10 Oct 2018 11:15 PM GMT (Updated: 10 Oct 2018 8:18 PM GMT)

திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கரூர்,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தோட்டகுறிச்சியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 58). இவருடைய மகள் சுதா (26). இவரும், திருச்சி மாவட்டம் மணப்பாறை கே.பெரியப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் பாலசுப்பிரமணியும் (31) கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தொழிலாளர்களாக கடந்த 2010-ல் வேலை செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலசுப்பிரமணியை, சுதா வற்புறுத்தினார். எனினும், தற்போது திருமணம் வேண்டாம் என கூறி பாலசுப்பிரமணி மறுத்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்தினால் பிரச்சினை வருமோ? என பாலசுப்பிரமணி பயந்துள்ளார். இதனால் மறைவான இடத்தில் வைத்து சுதாவை கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகத்தை அரங்கேற்றி விடலாம் என பாலசுப்பிரமணி முடிவு செய்தார்.

இதையடுத்து திருச்செந்தூர் கோவிலில் வைத்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சுதாவுக்கு வாக்குறுதி கொடுத்து அவரை மணப்பாறை பகுதிக்கு பாலசுப்பிரமணி அழைத்து வந்தார். பின்னர் அங்கிருந்து விருதுநகர் பந்தல்குடி நமசிவாயபுரத்தை சேர்ந்த ரெங்கராஜ் மகன் பாலா (30), மணப்பாறை மலையூர் சமுத்திரத்தை சேர்ந்த கண்ணன், தினேஷ் ஆகிய நண்பர்களுடன் தனது காதலியை காரில் அழைத்து கொண்டு பாலசுப்பிரமணி புறப்பட்டு சென்றார். பின்னர் விருதுநகர் மாவட்டம் பந்தல் குடி அருகே வந்த போது திடீரென அவர்கள் காரை நிறுத்தி கீழே இறங்கி பேசி கொண்டிருந்தனர். அப்போது பாலசுப்பிரமணி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தனது காதலி சுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அங்குள்ள ஒரு மரத்தில் சுதா அணிந்திருந்த சேலையால் அவரை தூக்கில் தொங்கவிட்டு விட்டு, அந்த 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் ஒரு பெண் பிணம் மரத்தில் தொங்குவது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பந்தல்குடி போலீசார், பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 174-ன்கீழ் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தனது மகள் சில நாட்களாக வீட்டுக்கு வராமல் போனதால் முனியப்பன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது மகள் வேலை பார்த்த டெக்ஸ்டைல் நிறுவனத்தில் அவர் விசாரித்த போது சுதாவின் காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டார். இதையடுத்து தனது மகள் சுதாவை சிலர் கடத்தி சென்று விட்டதாக கூறி வேலாயுதம்பாளையம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் முதல் கட்டமாக 366-வது பிரிவின் கீழ் கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து சுதாவின் காதலன் பாலசுப்பிரமணியை பிடித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுதா கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பந்தல்குடி போலீசார் சேகரித்த வழக்கு விவரங்களை வேலாயுதம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, கடத்திய நபரை கொலை செய்தல் (364-வது பிரிவு), ஆதிதிராவிடர்-பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், 302-வது பிரிவான கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கினை போலீசார் மாற்றம் செய்தனர். பின்னர் இதில் தொடர்புடைய பாலசுப்பிரமணி மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று, குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நேற்றுமாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் தீர்ப்பு வழங்கினார். அதில், சுதாவை கொலை செய்த குற்றத்திற்காக (302-வது பிரிவு) ஆயுள் தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும், 364-வது பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1,000 அபராதமும், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 1989-ன்கீழ் ஆயுள்தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து அவரது காதலன் பாலசுப்பிரமணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கண்ணன், தினேஷ் ஆகியோர் மீது எவ்வித முகாந்திரமும் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு குற்றவாளி பாலா மீது பிடிவாரண்டு உத்தரவு நிலுவையில் இருப்பதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். பாலசுப்பிரமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த போதும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு கூறியுள்ளதால் அதிகபட்சமாக ஒரு ஆயுள்தண்டனையையே சுதாவின் காதலன் பாலசுப்பிரமணி அனுபவிப்பார் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story