ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 6:50 PM GMT)

ராமேசுவரத்தில் மீனவர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை, காரைக்கால், ஜெகதாபட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றனர். இதில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இலங்கை அரசு 42 படகுகளை மட்டும் விடுவித்தது. பெரும்பாலான படகுகள் விடுவிக்கப்படவில்லை.

இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் மீன்பிடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் முழுமையாக பழுதடைந்த படகுக்கு தலா ரூ.30 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 3–ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அரசு, தமிழக மீனவர்களின் படகுகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ததுடன் அந்த படகுகளை எடுத்துச்செல்லுமாறு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் இலங்கை சென்று படகுகளின் நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள பெரும்பாலான படகுகள் உபயோகப்படுத்த முடியாதவகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவினர் வருகிற 16–ந்தேதி தமிழகம் வர உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்ற மீனவர் குழு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களையும், மீன்துறை அதிகாரிகளையும் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுகுறித்து சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்கப்படும். மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று, நாளை (திங்கட்கிழமை) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர். அதற்காக ராமேசுவரத்தில் அனைத்து படகுகளிலும் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ராமேசுவரம் துறைமுகப்பகுதி களைகட்டியுள்ளது.


Next Story