முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2018 11:30 PM GMT (Updated: 13 Oct 2018 7:09 PM GMT)

டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை என சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சேலம்,

பா.ஜனதா மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு பா.ஜனதா அரசு பல நல்லத்திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எந்தவிதமான திட்டங்களையும் கொண்டு வரவில்லை என மாயதோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசில் தி.மு.க. 10 ஆண்டுகள் அங்கம் வகித்த போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பட்டியல் இட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் பிரதமர் மோடி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி ‘மீ டு‘வில் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எந்த விதமான கருத்துகளையும் சொல்வதில்லை. இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் எஸ்.வி.சேகர் இன்னொருவர் பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்தார். இது மிகவும் தவறு தான். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்.

மேலும் அவர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். எஸ்.வி.சேகரை பலர் நேரடியாக குற்றம்சாட்டினார்கள். ஆனால் எஸ்.வி.சேகர் நேரடியாக குற்றத்தில் ஈடுபடவில்லை. வைரமுத்து மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தபோதும் ஏன்? கண்டிக்கப்படவில்லை. பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர் யாராக இருந்தாலும், எந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

நெல்லை, மதுரை, தஞ்சை ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் ரூ.150 கோடியில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. செங்கல்பட்டில் ரூ.600 கோடியில் தடுப்பூசி தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடனே அவர் பதவி விலக தேவையில்லை. விசாரணையில் இருக்கும் போது குற்றவாளி இல்லை.

நிர்மலா தேவி விவகாரம் விசாரணையில் உள்ளது. கவர்னர் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைப்பது தவறு. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது பண்பாட்டை சீர்குலைக்கும் செயலாகும். நடிகர் கமல்ஹாசன் அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்து இருப்பதால் கூட்டம் அதிகமாகும் என கூறியிருக்கிறார். அவர் சினிமா டிக்கெட் வைத்து கூட்டம் என கூறுகிறார். இந்த கூட்டம் சாமியை கும்பிட போகிற கூட்டம். இது பற்றி அவருக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story