திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம்: பயணிகள் 50 பேர் மீது வழக்குப்பதிவு


திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம்: பயணிகள் 50 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 9:03 PM GMT)

திருப்பூரில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூரில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக பெங்களூருக்கு முற்றிலும் குளிர் சாதன வசதி, படுக்கை வசதி, வை-பை உள்ளிட்ட வசதிகள் கொண்ட இரட்டை அடுக்கு கொண்ட உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. புறப்படும் நேரத்தில் இருந்து 7 மணி நேரத்திற்குள் பெங்களூருக்கு சென்று விடும். இதனால் இந்த அதிவேக ரெயிலில் பயணிக்க சாதாரண ரெயிலை விட 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயண நேரத்தில் ஒரு நிமிடம் கூட தாமதம் ஏற்படக்கூடாது என்பது தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாடாக இருந்து வருகிறது.

தினந்தோறும் மதியம் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரெயில் இரவு 9 மணிக்கு கோவை சென்று சேரும். அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி இரவு 8.20 மணிக்கு இந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அன்று, திருப்பூருக்கு இரவு 7.15 மணிக்கு வரவேண்டிய நாகர்கோவில்-கோவை பயணிகள் ரெயில் 3 மணிநேரம் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் திருப்பூர் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடை பகுதியில் சுமார் 3 மணி நேரம் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழித்தடம் வழியாக வந்த உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. இரவு 8.20 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட வேண்டிய அந்த ரெயில் 1.25 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தாமதம் குறித்து துறை ரீதியான உடனடி விசாரணைக்கு சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது ரெயில் மறியல் காரணத்தாலேயே உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மறியல் போராட்டம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களின் அடிப்படையில் அதில் கலந்து கொண்ட சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் மற்றும் பிற பயணிகளை அடையாளம் கண்டுள்ளனர். இதன்படி ரெயில்வே நிலைய மேலாளருக்கு மிரட்டல் விடுத்தல், ரெயில்வே போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ரெயில் தாமதத்திற்கு மறியல் காரணம் என்பன உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.



Next Story