மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை


மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
x
தினத்தந்தி 14 Oct 2018 11:30 PM GMT (Updated: 14 Oct 2018 2:22 PM GMT)

மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை பெருமாள் கோவலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

சோழவந்தான்,

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. வைகை கரையோரம் அமைந்திருக்கும் இந்த கோவிலில் குருபகவான் தவக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு வாய்ந்ததாகும். குரு தலமாக போற்றப்படும் இக்கோவிலில் கடந்த வாரம் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை 6 மணியளவில் அர்ச்சகர்கள் கோவிலை பூட்டி சென்றுவிட்டனர்.

நள்ளிரவு 12½ மணியளவில் மின் வயர்கள் உரசி தீப்பிடித்ததால் கோவிலில் உள்ள அபாய மணி ஒலித்தது. இதைக் கேட்ட காவலாளிகள் ராஜகோபுர அவசர வழியாக கோவிலின் உள்ளே சென்று சுற்றி பார்த்தனர். வயரில் குரங்குகள் அல்லது பறவைகள் உரசியதால் தீப்பிடித்திருக்கலாம் என நினைத்து அபாய ஒலி சத்தத்தை நிறுத்திவிட்டு வந்து விட்டனர்.

நேற்று அதிகாலை கோவில் ஊழியர் மணிகண்டன் கோவிலின் வடக்கு பகுதிக்கு சென்றபோது அங்குள்ள சுவரில் வேட்டியால் கயிறுபோல் கட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி கோவில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்படட்து. அர்ச்கர் ரகுராமர், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆலயபணியாளர் வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் கோவில் வாசல் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் செயல் அலுவலர் காடுபட்டி போலீசில் புகார் அளித்தார்.

சமயநல்லுர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் துப்பறியும் நாய், கைரேகை நிபுணர்கள், தடயஅறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு இங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

கோவிலில் கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது.

இந்த கோவிலில் 1971–ம் ஆண்டு 2 ஐம்பொன் சிலைகள் திருட்டுபோனது. பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் இப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்று கூறினார்.


Next Story