பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 40 பேர் கைது


பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 40 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 6:22 PM GMT)

பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் எழுதப் பட்டிருந்த இந்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அழித் தனர். இதையொட்டி 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுதப்பட்டதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இந்தி அழிப்பு போராட்டம் பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் நேற்று நடந்தது. இதற்கு, பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கழக வெளியீட்டு செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் அசோக் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மைல்கற்களில் இந்தியில் எழுதுவதை மத்திய அரசு கைவிடக்கோரி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தநிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கோவை வடக்கு மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் அகில் குமரவேல், உடுமலை நடராஜன் உள்பட 40 பேரை பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னதாக, பொள்ளாச்சி- கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு மைல்கல்லில் ஊர் விவரம் இந்தியில் எழுதப்பட்டு இருந்ததை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அழித்தனர். இவர்களின் போராட்டத்திற்கு தி.மு.க. ம.தி.மு.க., வி.சி.க., ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story