சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கோத்தகிரியில் அய்யப்ப பக்தர்கள் பேரணி


சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கோத்தகிரியில் அய்யப்ப பக்தர்கள் பேரணி
x
தினத்தந்தி 14 Oct 2018 11:15 PM GMT (Updated: 14 Oct 2018 10:31 PM GMT)

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரியில் அய்யப்ப பக்தர்கள் பேரணி சென்றனர்.

கோத்தகிரி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க வலியுறுத்தியும், பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்திலும் போராட்டங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரியில் இந்து அமைப்புகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. முன்னதாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் டானிங்டன் சந்திப்பில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து அய்யப்ப பஜனையுடன் காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்கெட் திடல், பஸ் நிலையம், காம்பாய் கடை வழியாக கடைவீதியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பேரணியாக சென்றனர். அங்கு சாமி தரிசனத்துக்கு பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பேரணியையொட்டி கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அய்யப்பன் கோவிலில் இருந்து சரண கோஷ பேரணி தொடங்கியது. ஊர்வலமானது பஜார் வழியாக மூலக்கடை சென்று, அங்கிருந்து மீண்டும் கோவிலுக்கு வந்து நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பின்னர் கோவில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்கள் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு கோவிலின் கமிட்டி தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Next Story