21, 22-ந்தேதிகளில் கரூர், திருச்சி, புதுக்கோட்டைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை


21, 22-ந்தேதிகளில் கரூர், திருச்சி, புதுக்கோட்டைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை
x
தினத்தந்தி 16 Oct 2018 11:15 PM GMT (Updated: 16 Oct 2018 7:56 PM GMT)

வருகிற 21, 22-ந்தேதிகளில் கரூர், திருச்சி, புதுக்கோட்டைக்கு வரும் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

திருச்சி,

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி ரெயின்போ சேகரின் மகள் தாரணி - சிவா திருமணம் வருகிற 22-ந்தேதி காலை கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் திருச்சி வருகிறார். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவருக்கு பெட்டவாய்த்தலையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. இந்திரா காந்தி மகன் தினேஷ்- ஹரிணி நிவேதா திருமண வரவேற்பு நிகழ்ச்சி 21-ந்தேதி மாலை திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

21-ந்தேதி இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கும் எடப்பாடி பழனிசாமி மறுநாள் (22-ந்தேதி) காலை புதுக்கோட்டைக்கு புறப்பட்டு செல்கிறார். புதுக்கோட்டை அருகே விராச்சிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் இல்ல திருமண விழாவினை நடத்தி வைத்து பேசுகிறார்.

அதன் பின்னர் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் தங்கும் எடப்பாடி பழனிசாமி 22-ந்தேதி காலை புதுக்கோட்டைக்கு கிளம்பும் முன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

Next Story