சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை-சேலம் கட்டணத்தை குறைக்க முடிவு


சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை-சேலம் கட்டணத்தை குறைக்க முடிவு
x
தினத்தந்தி 17 Oct 2018 10:30 PM GMT (Updated: 17 Oct 2018 8:20 PM GMT)

கோவையில் இருந்து செல்லும் சதாப்தி எக்ஸ்பிரசில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் சேலத்துக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை,

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் 4 ரெயில்கள் செல்கின்றன. இதில் மதியம் 3 மணிக்கு முன்பு டோரண்டோ எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த ரெயிலுக்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் அந்த ரெயில் வாபஸ் பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த ரெயிலுக்கு பதில் கோவை-சென்னை இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரெயில் கோவையில் இருந்து தினமும் மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று சென்னை சென்டிரலை இரவு 10.15 மணிக்கு சென்றடையும். அந்த ரெயிலில் செல்பவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. முற்றிலும் ‘குளு குளு’ வசதி கொண்ட அந்த ரெயிலில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதனால் பயணிகள் எண்ணிக்கை குறைவதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஆலோசனை நடத்தி கோவை-சேலம் இடையே கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கோவை-சேலம் இடையே சிற்றுண்டியை சேர்க்காமல் ரூ.370 என்றும் ஜி.எஸ்.டி. மற்றும் சிற்றுண்டி கட்டணத்தையும் சேர்த்து ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது. 164 கிலோமீட்டர் தூரம் கொண்ட கோவை-சேலம் இடையேயான இந்த கட்டணம் பஸ் கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக பயணிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து கோவை ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சதாப்தி எக்ஸ்பிரசில் விமான கட்டணத்தை போன்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது 4 மாதத்தில் சென்னை செல்ல முன்பதிவு செய்தால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.800. ஆனால் நாட்கள் குறைய குறைய அதன் கட்டணம் அதிகமாகும். பயண தேதி நெருங்க நெருங்க முன்பதிவு அதிகரிக்க, அதிகரிக்க, கட்டணம் அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக ரூ.ஆயிரத்து 400 வரை வசூலிக்கப்படுகிறது. கோவையில் இருந்து புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அந்த ரெயிலில் சேலத்துக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து கோவையில் இருந்து சேலத்துக்கு கட்டணம் ரூ.300 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்சில் செல்லும் பயணிகளை ரெயிலுக்கு இழுக்க முடியும். இதுபற்றிய இறுதி முடிவை தென்னக ரெயில்வே நிர்வாகம் தான் எடுக்கும். தற்போது கட்டணத்தை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதே போல மற்ற ரெயில்களிலும் கோவை- சேலம் இடையேயான கட்டணத்தை குறைக்கும் திட்டமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story