சேலத்தில் பரபரப்பு: கிணற்றில் இளம்பெண் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை


சேலத்தில் பரபரப்பு: கிணற்றில் இளம்பெண் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Oct 2018 11:00 PM GMT (Updated: 17 Oct 2018 9:09 PM GMT)

சேலத்தில் இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் மணக்காடு ரங்கசாமி பிள்ளையார் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் விசாலி (வயது 22). இவர் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தார். இந்த படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவர் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 15-ந் தேதி விசாலிக்கு உடல்நிலை சரியில்லை. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்தும் அவர் செல்லவில்லை

இந்த நிலையில் விசாலியின் பெற்றோர் வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். பின்னர் அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த விசாலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளில் அவரை தேடி பார்த்தனர். அவரை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து அவர் மாயமானது குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஜான்சன்பேட்டை ராஜா நகரில் ஒரு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விசாலி பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் விசாலியின் உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்து விசாலி தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தற்போது வீடு மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என்று கருதிய பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டை பார்த்து குடியேற இருந்தனர். இந்த வீட்டில் உள்ள கிணற்றில் தான் விசாலி இறந்து கிடந்ததார் என்பது தெரியவந்தது. மேலும் விசாலி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அஸ்தம்பட்டி பகுதியில் சமீபகாலமாக கொலை மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போலீசார் சரியாக ரோந்து பணியை மேற்கொள்வதில்லை. இதன் காரணமாக தான் கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம்பெண் மாயமான பின்பும் போலீசார் சரியாக விசாரணை மேற்கொள்ளவில்லை. தற்போது அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story