ஆத்தூரில் திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்


ஆத்தூரில் திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 8:46 PM GMT)

ஆத்தூரில் திருமண நேரத்தில் மணமகள் ஓட்டம் பிடித்தார். இதனால் மணமகனுக்கு உறவினர் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டினார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியைச் சேர்ந்த ஒருவர் சுங்கச்சாவடியில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும், பெத்தநாயக்கன்பாளையம் சின்னம்மசமுத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த பெண் எம்.எஸ்சி. படித்துவருகிறார்.

ஆத்தூரில் உள்ள ஒரு கோவிலில் காலை 6 மணிக்கு திருமணமும், அதைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக நேற்று அதிகாலை கோவிலுக்கு மணமக்கள் வீட்டினர் வந்திருந்தனர். உறவினர்கள், நண்பர்களும் திரண்டு வந்தனர். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் மணமகளை தேடியபோது அவரை காணவில்லை. மணமகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதனால் மணமக்களின் பெற்றோர்களும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண விழாவுக்கு வந்தவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இருவீட்டாரும் வரவேற்பு நடைபெறும் மண்டபத்திற்கு வந்தனர். அங்கு மணமகனுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த உறவினர் பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக பேசி முடிவு செய்தனர். உடனே அந்த பெண்ணை அலங்கரித்து அழைத்து வந்தனர். பின்னர் பகல் 11 மணிக்கு திருமணம் நடைபெற்றது.அப்போது உறவினர் பெண்ணுக்கு மணமகன் தாலிகட்டினார்.

இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட எம்.எஸ்சி. படித்து வரும் பெண்ணுக்கும், அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்ததும், அந்த வாலிபருடன் அந்த பெண் சென்றதும் தெரியவந்தது.

Next Story