குடிபோதையில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை, தொழிலாளி கைது


குடிபோதையில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை, தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 7:08 PM GMT)

ஏரியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பெரும்பாலையை அடுத்துள்ளது மத்தாளபள்ளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 35). விவசாயி. இவருடைய மனைவி ராணி (29). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். எர்ரப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

முனியப்பனுக்கும், சுப்பிரமணிக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர்கள் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முனியப்பனும், சுப்பிரமணியும் மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு எர்ரப்பட்டியில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கு அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி கீழே கிடந்த கட்டையை எடுத்து முனியப்பனை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story