நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 22 Oct 2018 11:15 PM GMT (Updated: 22 Oct 2018 8:04 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் புதுவை மாநில எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி ஆணைப்படி புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பல்வேறு கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுவை மாநில மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் நேற்று புதுவை வந்தார். அவருக்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், தனவேலு, எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுவை மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் வருகிற 26–ந் தேதி வரை புதுவையில் தங்கி ஒவ்வொரு குழு நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்த உள்ளார்.


Next Story