பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண்


பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:15 PM GMT (Updated: 23 Oct 2018 7:24 PM GMT)

புதுக்கடை அருகே பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

புதுக்கடை,

குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உண்டு. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த உறவுக்கார இளம்பெண்ணுக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 19-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கேள்விபட்டதும் ராஜேஷ் தலைமறைவானார்.

இதற்கிடையே இளம் பெண்ணின் சாவுக்கு காரணமான ராஜேசை கைது செய்யக்கோரி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரிடம், ராஜேசை கைது செய்யும் இளம்பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

அதன்படி உடலை வாங்காமல் உறவினர்கள் சென்று விட்டனர். இதனால் இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை அறையிலேயே வைக்கப்பட்டிருந்தது. மேலும் தலைமறைவான ராஜேசை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகள் அமைத்தனர்.

இந்த நிலையில் வாலிபர் ராஜேஷ் நேற்று குழித்துறை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ராஜேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். அப்போது இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ராஜேசை கைது செய்யும் வரை இளம்பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் என கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், ராஜேஷ் கோர்ட்டில் சரண் அடைந்தார் என்ற செய்தியை கேட்டதும் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் இளம் பெண்ணின் உடலை வாங்கி சென்ற அவர்கள் அடக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

Next Story