தரம் குறைவாக சத்துணவு வழங்கப்படுவதாக புகார்: அரசு பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்


தரம் குறைவாக சத்துணவு வழங்கப்படுவதாக புகார்: அரசு பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 7:39 PM GMT)

தரம் குறைவாக சத்துணவு வழங்கப்படுவதாக கூறி அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டயிட்டனர்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 120 மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் வழக்கம் போல் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது உணவில் வண்டுகள் இறந்து கிடந்தன. இதனால் மாணவர்கள் சத்துணவை சாப்பிட மறுத்து விட்டனர்.

இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் திரண்டு வந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு நியூகோப் போலீசார் விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தரம் குறைந்த சத்துணவை பள்ளிக்கூட நிர்வாகம் வழங்கி வருவதாகவும், சம்பந்தப்பட்ட சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர்.

பின்னர் கூடலூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனி வரும் காலங்களில் சுகாதாரமாகவும், தரமாகவும் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:–

சத்துணவு சமைக்க பயன்படுத்தப்படும் அரிசியில் வண்டு அதிகளவு உள்ளது. சத்துணவு ஊழியர்கள் தண்ணீரில் அரிசியை கழுவுவது இல்லை. இதனால் வண்டுகள் கிடக்கும் உணவை மாணவர்கள் சாப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் வந்து உறுதி அளித்துள்ளார். உறுதி அளித்தவாறு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story