சேலம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பிளஸ்-2 மாணவி சாவு


சேலம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பிளஸ்-2 மாணவி சாவு
x
தினத்தந்தி 26 Oct 2018 10:36 PM GMT (Updated: 26 Oct 2018 10:36 PM GMT)

சேலம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவருடைய மகள் கிருத்திகா(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாட்டுக்கு புல் அறுப்பதற்காக கிருத்திகா தோட்டத்திற்கு சென்றார்.

பின்னர் அவர் அங்கு புல் அறுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். பாரம் அதிகமாக இருந்ததால் அவர் தள்ளாடியபடியே தோட்டத்து வழியே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கிருத்திகா தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story