மோட்டார்சைக்கிளில் வாலிபரை கடத்திச்சென்று தாக்குதல் - கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது


மோட்டார்சைக்கிளில் வாலிபரை கடத்திச்சென்று தாக்குதல் - கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 11:00 PM GMT (Updated: 31 Oct 2018 10:06 PM GMT)

முன்விரோதம் காரணமாக மோட்டார்சைக்கிளில் வாலிபரை கடத்திச்சென்று சரமாரியாக தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் முன்விரோதம் காரணமாக மோட்டார்சைக்கிளில் வாலிபரை கடத்திச்சென்று சரமாரியாக தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை பர்மாகாலனி அண்ணாநகரை சேர்ந்தவர் சிவநேசன் (வயது19). இவருக்கும் தஞ்சை மேலவஸ்தா சாவடியை சேர்ந்த கபிலன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சிவநேசன் தனது நண்பருடன் ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு சலூன்கடைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த கபிலன் உள்பட 7 பேரும் சேர்ந்து சிவநேசனை இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்று விமானம் நிலையம் அருகே காட்டுப்பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

பின்னர் அங்கிருந்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் பகுதி ஆகிய இடங்களுக்கு கடத்திச்சென்று அங்கும் காட்டுப்பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சிவனேசனுக்கு முதுகு உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த சிவநேசன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிவனேசன் கொடுத்த புகாரின் பேரில் ரகுராமன் (19), ஹரிபாஸ்கர், நவீன்குமார், பிரசாந்த், கலைச்செல்வன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கபிலன் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஹரிபாஸ்கர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story