துவரங்குறிச்சி அருகே பஜனை மடத்தில் சிலைகள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


துவரங்குறிச்சி அருகே பஜனை மடத்தில் சிலைகள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 4 Nov 2018 9:45 PM GMT)

துவரங்குறிச்சி அருகே பஜனை மடத்தின் பூட்டை உடைத்து சிலைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே காரைப்பட்டியில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான பஜனை மடம் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு பஜனை நடைபெறும். பஜனை முடிந்த பின்னர் மடத்தை பூட்டி விட்டு சென்று விடுவார்கள்.

இந்நிலையில் நேற்று மடத்தின் கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் பஜனைமட நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் வந்து பார்த்தபோது, மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கு இருந்த 7 உலோக சிலைகள் திருட்டு போய் இருந்தது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது.

இதையடுத்து மடத்தின் சார்பில் ராமச்சந்திரன் என்பவர் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வாசுகி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து விரல்ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story