தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் மக்கள் கூட்டம் அலை மோதியது


தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் மக்கள் கூட்டம் அலை மோதியது
x
தினத்தந்தி 5 Nov 2018 11:17 PM GMT (Updated: 5 Nov 2018 11:17 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

நெல்லை,

தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை டவுன் ரத வீதிகளில் புதிய துணிகள் வாங்க நேற்று கூட்டம் அலை மோதியது. இதேபோல் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. துணிக்கடைகள், நகைக்கடைகளில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகையொட்டி புதிய ரக துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆய்த்த ஆடைகளும் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளன. அதை மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை டவுன் கடைகளுக்கு வந்து புதிய துணிகளை வாங்கி சென்றனர்.

நெல்லை டவுன் ரத வீதிகளை சுற்றி ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. அந்த கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள பட்டாசு கடைகள், இனிப்பு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஏதாவது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 56 கேமராக்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக 25 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஊர்காவல் படை உள்பட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர ரோந்து பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். நெல்லை மாநகர பகுதியில் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

வெளியூரில் இருந்து நெல்லையில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்து. ஆனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் சென்ற பஸ்களில் அதிக அளவு கூட்டம் இல்லை. ரெயில்களை பொறுத்த வரையில் சென்னையில் இருந்து வரும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு நெல்லை வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன.


Next Story