ஏரியில் நர்சு பிணமாக மிதந்த மர்மம்: ஒருதலை காதலால் தற்கொலை - வாலிபர் கைது


ஏரியில் நர்சு பிணமாக மிதந்த மர்மம்: ஒருதலை காதலால் தற்கொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 10:34 PM GMT)

ஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்த நர்சு, ஒரு தலை காதலால் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்,

வேலூர் அருகே ஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்த நர்சு ஒரு தலை காதலால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூரை அடுத்த கீழ்மொணவூரை சேர்ந்தவர் கதிரேசன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அனிதா (வயது 28), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அனிதா நேற்று முன்தினம் காலை சதுப்பேரி ஏரியில் பிணமாக மிதந்தார்.

தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனிதாவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன.

இது குறித்து அனிதாவின் கணவர் கதிரேசன் போலீசில் புகார் அளித்தார். அதில், எனது மனைவியை அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) கடத்தி கொலை செய்திருக்கலாம் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அனிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அஜித்குமாருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனிதா சகஜமாக நேரிலும், செல்போனிலும் அஜித்குமாருடன் பேசி வந்துள்ளார். ஆனால் அஜித்குமார் ஒருதலையாக அனிதாவை காதலித்து வந்துள்ளார்.

அனிதா அடிக்கடி செல்போனில் பேசியதை பார்த்த கணவர் கதிரேசன் அவரை கண்டித்துள்ளார். மேலும் அனிதாவிடம் இருந்து செல்போனை பறித்து விட்டார். இந்த நிலையில் தீபாவளியன்று மாலையில் கதிரேசன் ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். சிறிதுநேரத்தில் அனிதா தனது குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அஜித்குமார், அவரை வழிமறித்து தன்னுடன் பேச மறுப்பது குறித்து கேட்டுள்ளார். மேலும் அனிதாவை ஒருதலையாக காதலித்து வருவதாகவும், தன்னை காதலிக்கும்படியும் வற்புறுத்தி உள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், அனிதாவை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அனிதா விரக்தி அடைந்தார். அஜித்குமாருடன் பேசுவது குறித்து கணவர் சந்தேகம் அடைந்ததாலும், அஜித்குமார் காதலிக்கும்படி வற்புறுத்தியதாலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் குழந்தைகளை தனது அக்காள் வீட்டில் விட்டு விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறி சதுப்பேரி ஏரிக்கு சென்று அங்கு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் அனிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து வாலிபர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பிளஸ்-2 படித்து விட்டு கூலித்தொழில் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story