பெரம்பலூர் மாவட்டத்தில் 19–ந் தேதி வரை பொதுமக்களிடம் வக்கீல்கள் குறைகளை கேட்கிறார்கள் முதன்மை நீதிபதி தகவல்


பெரம்பலூர் மாவட்டத்தில் 19–ந் தேதி வரை பொதுமக்களிடம் வக்கீல்கள் குறைகளை கேட்கிறார்கள் முதன்மை நீதிபதி தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 5:12 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 19–ந் தேதி வரை பொதுமக்களிடம் வக்கீல்கள் குறைகளை கேட்கிறார்கள் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

தேசிய சட்டப்பணிகள் தினவிழாவினை முன்னிட்டு தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் தினவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அடித்தட்டை சேர்ந்த பாமரமக்களும் சட்ட உதவி பெறலாம். அவர்களுக்கு எந்த நேரமும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவ காத்திருக்கிறது. எனவே ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு பொருளாதார வசதி இல்லையே எவ்வாறு தங்களது வழக்குகளை நடத்துவது என்று கவலைப்பட வேண்டாம். எளிய முறையில் தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள சட்ட உதவி முகாம்களை அணுகலாம். அதற்கு முதற்கட்டமாக வருகிற 19–ந் தேதி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வக்கீல்கள் குழுமமும், சமூக சட்ட ஆர்வலர்கள் குழுமமும் பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிய இருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


பின்னர் சட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் முரளீதரன், சார்பு நீதிபதி சிரிஜா, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் வினோதா, நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், மோகனப்பிரியா மற்றும் உரிமையியல் நீதிபதி கருப்பசாமி மற்றும் வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகெட் அசோசியேசன் சங்கத் தலைவர் முகமது இலியாஸ் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல் அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சட்டப்பணிகள் தினவிழா அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி தலைமையில் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சரவணன், வக்கீல்கள் சங்க தலைவர் பழனிசாமி, முன்னதாக அரியலூர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் வரவேற்றார். முடிவில் அலுவலர் தனபால் நன்றி கூறினார்.

Next Story