உலக அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற சீர்காழி மாணவி தங்கம் வென்று சாதனை


உலக அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற சீர்காழி மாணவி தங்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 7:54 PM GMT)

உலக அளவிலான யோகா போட்டியில் சீர்காழி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாணவி சுபானு (வயது 15). இவர், சீர்காழி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் தென்அமெரிக்காவில் அர்ஜென்டினா மாகாணம் போசோடஸ் பகுதியில் 7 கண்டங்களை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற உலக அளவிலான யோகா போட்டி கடந்த 3-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து மாணவி சுபானு, கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர், கர்நாடகாவை சேர்ந்த மாணவர் ஒருவர் என 3 பேர் தென்அமெரிக்கா சென்று போட்டியில் பங்கேற்றனர்.

இதில் 12 முதல் 15 வயது வரையிலான பிரிவில் நடந்த போட்டியில் மாணவி சுபானு முதலிடம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் சாம்பியன் ஆப் சாம்பியன் என்ற பட்டத்தையும் சுபானு பெற்றார்.

மாணவி சுபானு கடந்த 2016-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் 2 தங்கமும், 2017-ம் ஆண்டு துபாய் நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்று 1 தங்கமும், 2018-ம் ஆண்டு மலேசியாவில் ஆசிய அளவில் நடந்த யோகா போட்டியில் 1 தங்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் கடந்த மாதம் டெல்லி ஆக்ராவில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற மாணவி சுபானு அடுத்த மாதம் (டிசம்பர்) சீனாவில் 42 நாடுகள் பங்கேற்கும் யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story