தமிழக மீனவர்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை வைகோ பேட்டி


தமிழக மீனவர்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை வைகோ பேட்டி
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 8:38 PM GMT)

தமிழக மீனவர்கள் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று வைகோ கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ நேற்று வந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்க போவது கிடையாது.இலங்கையில் நடைபெற உள்ள தேர்தலில் ஒருவேளை ராஜபக்சே வெற்றி பெற்றால் இலங்கை அரசின் சட்டத்தை திருத்தி அதிபர் பதவியில் இருந்து சிறிசேனாவை கழற்றிவிட்டு ராஜபக்சே அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ராஜபக்சே அதிகாரத்திற்கு வந்துவிட்டால் தமிழர்களின் பண்பாட்டு தளங்கள் அழிக்கப்பட்டு தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் அரங்கேறும். இலங்கை பிரச்சினையை பொருத்தவரை தமிழ் மாகாண சபை தலைவர் விக்னேஸ்வரன் கொண்டு வந்த தீர்மானம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் நலனுக்காக செயல்படவில்லை. அவர்கள் முழுவதுமாக சிங்களர் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

இலங்கையில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதாக இருந்தால் 4 ஆண்டு காலம் முடிய வேண்டும் என சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி தான் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர்கள் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதை கண்டிப்பதற்கும், இந்த சட்டத்தை விளக்குவதற்கும் நானே நேரில் பிரதமரிடம் சென்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து வைக்குமாறு கேட்டு கொண்டேன். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மீனவர்களின் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story