கரூரில் துணிகரம்: அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை


கரூரில் துணிகரம்: அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 8:58 PM GMT)

கரூரில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் சின்னஆண்டாங்கோவில் சுப்பையா லே-அவுட் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). இவர், மண்எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குணசேகரன் (46). இந்த 2 பேரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடனடியாக கரூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை நடந்த வீடுகளுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தபோது, பீரோவில் நகை-பணம் உள்ளிட்டவை வைத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருட்டு போன நகை-பணம் எவ்வளவு என்பது குறித்து அறிவதற்காக அவர்கள் கரூருக்கு வரவழைக்கப்பட்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீடுகளில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை கரூர் டவுன் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story