நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது


நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்’ - நகராட்சி ஆணையர் தலைமையில் ஒட்டப்படுகிறது
x
தினத்தந்தி 14 Nov 2018 11:15 PM GMT (Updated: 14 Nov 2018 9:02 PM GMT)

நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்‘ ஒட்டும் பணி நகராட்சி ஆணையர் தலைமையில் நடந்து வருகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் கொசுப்புழு இல்லாத 1,800 வீடுகளில் பாராட்டு ‘ஸ்டிக்கர்‘ ஒட்டும் பணி நகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற கொசுப்புழு மூலமாக பரவுகிறது. பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படும் தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் அடுத்தவருக்கு பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்தும், தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரந்தோறும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டும் வருகிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் ஆய்வு மேற்கொண்டு, ஏடிஸ் கொசுப்புழு இல்லாத வீடுகளுக்கு அந்தந்த உள்ளாட்சிகள் சார்பில் சம்பந்தப்பட்ட வீட்டில் குடியிருப்பவர்களை பாராட்டி, பாராட்டு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவில் நகராட்சி பகுதியில் முதல் கட்டமாக 1,800 வீடுகள் ஏடிஸ் கொசுப்புழு இல்லாத வீடுகளாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வீடுகளுக்கு பாராட்டு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. முதலில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் கண்டறியப்பட்ட 5 வீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை நகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு நகர்நல அலுவலர் கின்சால் முன்னிலை வகித்தார். பாராட்டு ஸ்டிக்கர்களை கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளில் ஒட்டினர். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மகாதேவன் பிள்ளை, நாகர்கோவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மற்ற பகுதிகளிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கு ஸ்டிக்கர்களை அந்தந்த பகுதி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஒட்டி வருகிறார்கள்.

ஏடிஸ் கொசுப்புழு இல்லாத வீடுகள் ஆய்வு பணி தொடர்ந்து நடைபெறுவதால் வாரந்தோறும் கொசுப்புழு இல்லாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாகர்கோவில் நகராட்சியில் கொசுப்புழு இல்லாத வீடுகளுக்கு ஒட்டும் ஸ்டிக்கர்களை நாகர்கோவில் ரோட்டரி சங்கம் அச்சிட்டு வழங்கியுள்ளது.


Next Story