குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தம்பிதுரை, கலெக்டர் வருகைக்கு எதிர்ப்பு; காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தம்பிதுரை, கலெக்டர் வருகைக்கு எதிர்ப்பு; காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 PM GMT (Updated: 15 Nov 2018 7:03 PM GMT)

மணப்பாறை அருகே வளநாட்டில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தம்பிதுரை, கலெக்டர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர். 5 மணி நேரம் நீடித்த மறியலால் போக்குவரத்து பாதித்தது.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு ஊராட்சியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. இது தவிர எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுதொடர்பாக தங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, திருச்சி கலெக்டர் ராஜாமணி மற்றும் அதிகாரிகள் வளநாடு பகுதியில் நேற்று காலை பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க வரும் நிகழ்ச்சியின் போது போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கைகாட்டி - பாலக்குறிச்சி சாலையில் வளநாடு கடைவீதியில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், வாசுகி மற்றும் வளநாடு போலீசாரும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த மக்கள் தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. கடந்த சில வருடங்களாக கூறி வரும் நிலையில் இதுவரை அதிகாரிகள் யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லை. வளநாடு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இதுதொடர்பாக தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மு.தம்பிதுரை, கலெக்டர் வருவதால் அனைத்திற்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தந்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் கலெக்டர் ராஜாமணி உள்ளிட்ட அதிகாரிகள் வளநாடு செல்வதை தவிர்த்து விட்டு அடுத்த பகுதிக்கு சென்றனர். இதையடுத்து மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. உடனே நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஒரு பெண் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கிய பெண்ணை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் குறைகளை சுட்டிக்காட்டிய பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

Next Story